பட்டி

பந்த் பத்தும் செய்யும்

பந்த் பத்தும் செய்யும்

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் 5 நிமிடம் வாசிப்பு சமூகம்

“தலைவர் அறிவித்துள்ள, ‘பந்த்’தில் எனக்கு உடன்பாடில்லை; என் தொகுதியான உழவனூரில், பந்த் நடைபெறாது” என்ற உத்தமபுத்திரனின் அதிரடி அறிவிப்பு, அன்றைய, எல்லா செய்தி சேனல்களிலும், ‘பிரேக்கிங்’ செய்தி ஆனது.

‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா…’ என்பது போல் தான், உத்தமபுத்திரனின் அறிக்கை, எல்லாரையும் சந்தேகத்திற்குள்ளாக்கியது.

அடிமட்ட தொண்டனாக சேர்ந்து, அக்கட்சிக்காக உழைத்து, தலைவரின் அபிமானத்தை பெற்று, கடந்த கால தேர்தல்களில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.,வாக தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ள உத்தமபுத்திரனா, இப்படி அறிக்கை விட்டுள்ளார் என்று, அனைவரும் வியப்படைந்தனர்.

“என்னப்பா நம்பவே முடியல…நம்ம எம்.எல்.ஏ., வா இப்படி செஞ்சிருக்காரு” என்று அவர் மேலிருந்த நம்பிக்கை இன்னும் மாறாத நிலையில், சிலர் பேசிக் கொண்டனர்.

‘அடுத்த தேர்தல்ல, நம்ப கட்சி ஜெயிச்சா, நிச்சயம் அமைச்சரா ஆகியிருப்பார்; இப்படி பேரை கெடுத்துக்கிட்டாரே…’ என்று சில அபிமானிகள் வருத்தப்பட்டனர்.

‘எந்த புத்துக்குள்ளே, எந்த பாம்பு இருக்குமோ… எதிர்கட்சிக்காரங்கிட்டே, பெரிய பெட்டியா வாங்கிட்டாரு போலிருக்கு’ என்றனர், சந்தேகப் பேர்வழிகள்!

கட்சியிலிருந்து, உடனே, உத்தமபுத்திரனை விலக்க வேண்டுமென்ற கோஷத்தோடு, நாடெங்கும் அவருடைய உருவ பொம்மையை எரித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர், கட்சிக்காரர்கள்.

புது கட்சி ஏதாவது ஆரம்பிக்கப் போகிறாரோ என்ற சந்தேகமும் மிகுந்திருந்ததால், மீடியாக்கள், உத்தமபுத்திரனை சூழ்ந்து, கேள்வி அம்புகளை வீசினர்.

ஆனால், அதற்கெல்லாம் ஒரே பதிலாக, புன்னகையோடு, ‘நல்லதே நடக்கும்; பொறுத்திருங்கள்’ என்று நிதானமாக கூறி, தன் ஆதரவாளர்களோடு, ஆலோசனை செய்ய இருப்பதாக கூறி, அங்கிருந்து சென்று விட்டார்.

அன்றைய,‘பிரேக்கிங்’ செய்தி கிடைத்து விட்ட ஆனந்தத்தில், எல்லா ‘டிவி’ செய்தி சேனல்களும், இதைப்பற்றி, ஹேஸ்யங்கள், கருத்துகள் மற்றும் பேட்டிகள் என்று, ஏற்கனவே திசை மாறியிருந்த சீரியல் ரசிகர்களுக்கு, தீனி போட்டன.

விவசாய குடும்பங்களின் சார்பாக தான், தாயகம் நலம் நாடும் கட்சியான, த.ந.நா., கட்சியின் தலைவர், ‘பந்த்’ அறிவித்திருந்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தக்க நிவாரணம் கொடுக்கப்படவில்லையே என்ற ஆதங்கத்தோடு, அவர் அறிவித்திருந்த இப்போராட்டத்திற்கு, மாற்றுக்கட்சிகள் கூட, எதிர்ப்பு சொல்ல முடியாத நிலையில், கட்சியின் பெரிய தூணாக கருதப்படும் உத்தமபுத்திரனை, யாரோ இப்படி தூண்டிவிட்டிருப்பதாக, ‘இன்றைய அரட்டை’ விவாதத்தில் கட்சி உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

அடுத்த நாளின், ‘இன்றைய அரட்டை’ விவாதத்திற்கும், உத்தமபுத்திரனே, ‘பிரேக்கிங்’ செய்தியை சப்ளை செய்திருந்தார். முந்தைய தினம், தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய உத்தமபுத்திரன், அதன்படி, தன் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வது போல், உழவனார் தொகுதி முழுவதிலும், தன் தொண்டர்களை அனுப்பியிருப்பதாக செய்திகள் வந்தன.நேரிடையாக இதை ஒளிபரப்பிய சேனல்கள், அப்படி அலைந்த ஒரு தொண்டரை பேட்டி கண்டனர்.

“நீங்க, எத்தனை வருஷமா த.ந.நா., கட்சியில இருக்கீங்க?” மைக்கை நீட்டியபடி கேட்டார், நிருபர்.

“சுமார், 40 வருஷமா இருக்கேன்.”

“உத்தமபுத்திரன் எத்தனை வருஷமா கட்சியில இருக்காரு?”

“அவரோட அப்பா, கட்சி அபிமானி; பரம்பரை பரம்பரையா, இந்த கட்சிக்கு உழைக்கிற குடும்பங்க அவங்க.”

“அப்போ இப்படி ஒரு துரோகம் செய்யலாமா. உங்க கட்சி அறிவிச்சிருக்கிற போராட்டத்துக்கு எதிரா அறிக்கை கொடுத்துட்டு, இப்போ உங்களையெல்லாம் தொகுதி முழுக்க அனுப்பி, அப்படி என்ன பிரசாரம் செய்ய சொல்லியிருக்காரு?” என்று கேட்டார், நிருபர்.

அத்தொண்டன் அளித்த பதில், கொஞ்சம் அதிர்ச்சி ஊட்டுவதாகவும், உத்தமபுத்திரன் மீது, பொதுமக்களுக்கு இருந்த சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவதாகவும் இருந்தது.

“இப்போ எம்.எல்.ஏ., வோட அடுத்த கட்ட நடவடிக்கைக்கு, கொஞ்சம் நிதி தேவையாயிருக்கு; அதுக்காக தான், தொகுதி முழுவதும் தனித்தனி குழுக்களாக அலைஞ்சிக்கிட்டிருக்கோம்,” என்று அப்பாவித்தனமாக கூற, அதை, தொலைக்காட்சியில் பார்த்த கட்சி தலைவருக்கு, உத்தமபுத்திரன் மீது, இதுவரை வராத கோபம் மூண்டது.

அன்று மாலையே, பத்திரிக்கையாளர்களை கூட்டி, “உத்தமபுத்திரனின் செயல்பாடுகள், கட்சிக்கு முற்றிலும் முரண்பாடானவை; கட்சியின் சார்பாக, நிதி கேட்டு யார் வந்தாலும், தயவுசெய்து, அதை மறுத்து விடுமாறு, உழவனூர் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். மேலும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும், உத்தமபுத்திரனின் இந்த ஈனத்தனமான செயலை கண்டிக்கிறேன்; அவருடன் தொடர்பு கொள்ள முயற்சித்து, அவருடைய மொபைல் போன், ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் யார் வலையிலோ சிக்கியிருப்பது தெளிவாகிறது. கட்சியிலிருந்து, அவரை கூடிய விரைவில் அகற்ற, பொதுக்குழு கூட்டி முடிவெடுக்க உள்ளோம்,” என்று காரசாரமாக அறிவித்து, அடுத்தநாள் நடக்கவிருக்கும் கடை அடைப்பு போராட்டத்திற்கு, முழு ஆதரவு நல்குமாறு, பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

‘பந்த்’ அன்று எல்லார் கவனமும், உழவனூர் மீதே இருந்தது. ‘அதிரடியான அரசியல் திருப்பங்களை ஏற்படுத்தப்போகும் அடித்தளமாக, உழவனூரில் சம்பவங்கள் நிகழக்கூடும்’ என்ற எதிர்பார்ப்புடன் எல்லாரும் இருந்தனர். மற்ற இடங்களிளெல்லாம், போராட்டம், வெற்றி பெற்றிருப்பதில் மகிழ்ச்சி அடைந்திருந்த தலைவர், உழவனூரில் மட்டும், இதற்கு மாறான சூழல் நிலவியதை ‘டிவி’யில் பார்த்து, உத்தமபுத்திரன் மீது, தாங்கமாட்டாத வருத்தத்துடன் காணப்பட்டார்.

இந்நிலையில், உத்தமபுத்திரனைப் பற்றி பரபரப்பான ‘பிரேக்கிங்’ செய்தி அறிவிக்கப்பட்டதும், ஆர்வமாக, டிவியை பார்த்தார், தலைவர்.

‘உத்தமபுத்திரனின் உண்மையான வேஷம் வெளிப்பட்டது…’என்ற தலைப்புச் செய்தியோடு, அந்த பேட்டி ஆரம்பமானது.

உத்தமபுத்திரன், தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து நிற்க, அவர்களுக்கு முன் இருந்த மேஜையில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் அடுக்கப்பட்டிருந்தன. இக்காட்சியை பார்த்தவர்கள், ‘உத்தமபுத்திரனா இப்படி…’ என்று அதிர்ச்சியாயினர். எவ்வித வருத்தமோ, குற்ற உணர்வோ இல்லாத முகத்துடன், தன்னை சூழ்ந்திருந்த நிருபர்களின் கேள்விகளுக்கு, பதிலளிக்க துவங்கினார், உத்தமபுத்திரன்.

“ஏன் இப்படி ஒரு அதிரடியில இறங்கியிருக்கீங்க. ஏதாவது புதுக்கட்சி துவங்க போறீங்களா,” என்று கேட்டார் ஒரு நிருபர்.

“இன்னும் நாட்டுக்கு புதுப்புது கட்சிகள் தேவையா என்ன” குறுஞ்சிரிப்புடன், அலட்சியமாக பதிலளித்தார், உத்தமபுத்திரன்.

“உங்க கட்சித்தலைவர் அறிவிச்ச, ‘பந்த்’க்கு எதிரா செயல்பட்டுட்டு இருக்கீங்களே.…தலைவர், உங்கள கட்சியை விட்டு விலக்கப்போறதா சொல்லியிருக்காரே” என்று மற்றொரு நிருபர் கேட்க, அதற்கு, உத்தமபுத்திரன் என்ன பதில் சொல்ல போகிறாரென்று, தொலைக்காட்சி பெட்டியை ஆவலோடு பார்த்தார், தலைவர்.

“மதிப்பிற்குரிய எங்கள் தலைவர் தான், என் செயல்பாடுகளுக்கு எல்லாம் முக்கிய காரணம்” என்று உத்தமபுத்திரன் ஆரம்பித்த போது, ‘இது ஏதுடா புதுசா ஒரு குண்டை தூக்கிப் போடுறான்’ என்று தலைவருக்கு வியர்த்து விட்டது.

பக்கத்தில் வைத்திருந்த ஐஸ் வாட்டரை, ‘மடக் மடக்’கென்று குடித்து, ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

“விவசாய குடும்பங்களுக்கு நன்மை செய்யணும்ங்கிற நோக்கத்தில், தலைவர் அறிவிச்ச பந்த் இது… எந்த கட்சியா இருந்தாலும், பொது ஜனமா இருந்தாலும் விவசாயிகளுக்கு நல்லது செய்யப்போற போராட்டத்துக்கு ஆதரவு இல்லேன்னு சொல்ல முடியாது.

‘அப்படி முழு மனசோட தான், ‘பந்த்’ அன்னிக்கு கடையை மூட ஒத்துக்கிட்டு, போராட்டத்துக்கு ஆதரவு தர தயாரா இருந்தாங்க; நானும் என் தொகுதியில, ஒரு வாரத்துக்கு முன், எல்லா கடை முதலாளிங்ககிட்டயும், இதுக்கு ஆதரவு கேட்ட போது, யாரும் மறுப்பு சொல்லல. அந்நேரத்துல, ‘இது அரசியல் நோக்கமாய் நடத்தப்படுற போராட்டம்’ன்னு சில பேர், என் தொகுதியில பேச ஆரம்பிச்சாங்க.

அப்ப தான், என் மனசுல இப்படி ஒரு திட்டம் உருவாச்சு. பரிட்சார்த்தமா என் தொகுதியில இதை செய்து பாக்கட்டுமான்னு தலைவரை கேட்டேன்; அவர் தயங்கவே இல்ல.…‘இது பொதுநலம் கருதி செய்யற போராட்டம்ன்னு ஜனங்களுக்கு தெரியணும்; உன் யோசனை நல்லா இருக்கு; நடத்து’ன்னு தைரியம் கொடுத்தார்.

‘அதனால, எங்க தொகுதியில, ‘பந்த்’ நடக்காதுன்னு அறிவிச்சு, அடுத்த நாள், தொண்டர்களை அழைச்சு. ‘பந்துக்காக, ஒரு நாள் கடைய மூடினா, எத்தனை நஷ்டம் வருமோ, அதுல உங்க இஷ்டப்பட்ட அரை பாகமாகவோ, கால் பாகமாகவோ நம்ம தொகுதி உழவர் குடும்ப நிதியாய் கொடுத்து உதவலாமே’ என்ற வேண்டுகோளுடன் எல்லா கடைகளிலும் கேட்கச் சொன்னேன். அந்த வேண்டுகோளுக்கு, எல்லாருமே செவிசாய்த்து, மனப்பூர்வமாய் நிதி வழங்கியதை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

“எங்க மீது நம்பிக்கை ஏற்படணும்ங்கிறதுக்காக காசோலையா கொடுத்தா ரொம்ப நல்லதுன்னு சொல்லச் சொன்னேன். காசோலையோ, பணமோ எதுவாயிருந்தாலும், அதற்கான ரசீதை கொடுத்து தான் பெற்றுக் கொண்டோம். அதைத்தவிர, தொகுதியில், ஒவ்வொரு வீடா போய், பொதுமக்களிடம் இந்த நற்பணிக்கு வசூல் செய்தோம். கூடவே, என் பங்களிப்பும், தொண்டர்களின் பங்களிப்புமா கிடைச்ச நிதி தான், இப்ப, எங்க முன், கட்டுக்கட்டா நீங்க பார்க்கிற பணம்; இதைத் தவிர காசோலைகள்.

‘நிதி கொடுத்தவர்களின் பெயர், அவர்கள் கொடுத்த நிதி, அது, 10 ரூபாயாயிருந்தாலும், பட்டியல் போட்டு, எல்லோருடைய பார்வைக்கும் வைச்சிருக்கோம்; யார் வேணும்ன்னாலும் சரி பார்த்துக் கொள்ளலாம். தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இருக்கும் எல்லா விவசாய குடும்பங்களின் கடன் முழுவதையும் அடைக்கவும், மேலும், நிவாரணமாக ஒரு தொகையை தரும் வகையிலும், நிதி வசூல் ஆகியுள்ளதென, பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

“இப்படி பெறப்பட்ட நிதியை, எங்கள் தொகுதியில், கட்சி வேறுபாடு இன்றி தேர்வு செய்யப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு, ஒரு விழா எடுத்து, எங்கள் தலைவரின் தலைமையில் வழங்க இருக்கிறோம். இப்படி ஒரு ஆக்கப்பூர்வமான போராட்டத்திற்கு வெற்றியை அள்ளித் தந்த என் தொகுதி மக்களுக்கும், ஊக்கமளித்து, அனுமதியளித்த என் அன்பு தலைவருக்கும், தொண்டர்களுக்கும், என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”

உத்தமபுத்திரன் உரையை முடித்ததும், அவரை சுற்றி இருந்த நிருபர்கள், ‘சார் கை கொடுங்க.…உங்கள போல நாலு பேரு இப்படி யோசிச்சா, நாடு நல்லாவே மாறிடும்’ என்று குதூகலமாக பாராட்டினர்.

“இந்த பாராட்டெல்லாம் எங்க தலைவருக்கு உரித்தானது,” என்று பேசி, பேட்டியை முடித்துக் கொண்டார், உத்தமபுத்திரன்.

‘டிவி’ பார்த்து உணர்ச்சிவசப்பட்ட தலைவர், உடனே, உத்தமபுத்திரனை பாராட்ட, மொபைல் போனை எடுத்தார். இப்போது, சட்டென தொடர்பு கிடைத்தது.

“தம்பி… என் பாராட்டுகள். உன் சாமர்த்தியமான அணுகுமுறை ரொம்ப ஜோர். போராட்ட குறிக்கோளையும் நிறைவேத்தி, அதே சமயம், கட்சிக்கும் நல்ல பேர் கிடைக்கிற மாதிரி செஞ்சுட்டே; என்னையும் விட்டுக் கொடுக்காம, உன் அபிமானத்தை காட்டிட்டே; நம்ம கட்சியோட அடுத்த தலைவர் நீதான்னு, எல்லாரும் ஒத்துக்கற மாதிரி, ஆக்கப்பூர்வமான உன் செயல்பாடு, எல்லாருக்கும் ஒரு முன்னுதாரணமா இருக்கும். வாழ்த்துக்கள்,” என்று நெகிழ்ந்தார்.

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களை மகிழ்வியுங்கள்!

கருத்துகள்

உங்கள் கருத்து அங்கீகரிக்கப்பட்ட பிறகு காண்பிக்கப்படும்

கருத்துகள் ஏற்றப்படுகின்றன...

கூடை

மொத்தம்

₹0