பட்டி

 பொய்யும் மெய்யும்

பொய்யும் மெய்யும்

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் 5 நிமிடம் வாசிப்பு நகைச்சுவை

அந்த கல்யாண பத்திரிக்கையை படித்த அத்தனை பேரும், ராம்ஜியைப் போல, முகத்தை சுளித்துக் கொண்டிருப்பர் என்பது நிச்சயம்.

அந்த பத்திரிக்கையில், ‘சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்துமாறு’ எனக் குறிப்பிட்டதுடன், பின் குறிப்பாக கண்ட வாசகம், அத்தனை நாகரிகமாக தெரியவில்லை.

‘திருமணத்திற்கு வாழ்த்த வரும் உறவு மற்றும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.…அன்பளிப்பை பிள்ளையார் படம், லட்சுமி படம், சீனரி என்றோ, டீ கப், பால் குக்கர், டேபிள் லேம்ப் போன்ற பொருளாகவா, வெறும் பொக்கேயாகவோ கொடுக்காமல், அதற்கான பணமாக அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று எழுதப்பட்டிருந்தது.

இதை படித்ததும், ராம்ஜிக்கு தன் மாமாவின் மேல் கோபமாக வந்தது. இப்படியொரு கேவலமான குறிப்பை, பத்திரிக்கையில் போட வேண்டுமா என, நினைத்துக் கொண்டான். இதை தன் மனைவி படித்தால், நிச்சயம் மானத்தை வாங்கி விடுவாள் என்று ராம்ஜிக்கு தோன்றியது. மனைவியிடம் பத்திரிக்கையை மறைக்கவும் முடியாது. சொந்த மாமா பையனின் கல்யாணம்; கண்டிப்பாக மனைவியுடன் போயே ஆகவேண்டும்.

இப்படி ராம்ஜி நினைத்து கொண்டிருந்தபோதே, “யாரு கூரியர் அனுப்பியிருக்காங்க?” என்று கேட்டபடி, அடுப்படியிலிருந்து வந்தாள் மனைவி ராதிகா.

“யாரோட கல்யாணம்?” என்று கேட்டு, பத்திரிக்கையை பிடுங்காத குறையாக வாங்கி, ஆவலுடன் படிக்க ஆரம்பித்தாள். மனைவி இதைப்பற்றி கேட்டால், என்ன சமாதானம் சொல்லலாம் என்று, ராம்ஜி தன் மூளையை கசக்கி, தற்சமயத்திற்கு தப்பித்துக் கொள்ள, குளியலறையில் தஞ்சம் புகுந்தான்.

சிவசங்கரன் மாமாவோ, அவர் மனைவியோ அல்பமானவர்கள் அல்ல; மாமாவிற்கு நல்ல தாராள மனசு. சொந்தம் பந்தம் என்று, அவருடைய பெரிய வீட்டில், எத்தனையோ உறவினர் வீட்டு விசேஷங்கள் நடந்துள்ளன. ராம்ஜி பால்ய வயதில், தன் தாயாருடன் அங்கு பல முறை போயிருக்கிறான். உறவுக்காரர்கள் எப்போது வந்தாலும், ஒரு வாரமாவது தங்கி கொட்டமடிப்பது வழக்கம். அவருடைய மனைவியும், இன்முகத்துடன், எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல், உபசரித்து அனுப்புவார். படிக்கும்போது, கோடை விடுமுறைகளை முக்கால்வாசி மாமா வீட்டில் தான், ராம்ஜி கழித்திருக்கிறான்.

இவையெல்லாம் கால சக்கர சுழற்சியில், பழைய நினைவுகளாகி, இப்போது மாமா சொத்து சுகங்களை எல்லாம் பைசல் செய்துவிட்டு, பிள்ளையோடு பெங்களூரில் இருக்கிறார். பிள்ளை அமெரிக்காவில் எம்.எஸ்., படித்துவிட்டு, இங்கு சாப்ட்வேரில் உத்யோகம் பார்க்கிறான். சிவசங்கரன் மாமாவிற்கு, பணத் தட்டுப்பாடு இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றியது.

மாமா சீசனுக்கு ஏற்றாற் போல், வியாபாரம் செய்வர். கொலு சமயங்களில் பொம்மை, விற்பதில் துவங்கி, தீபாவளிக்கு பட்டாசு, டி.வி.டி., வந்த நேரங்களில் கேசட், மொபைல் போன் விற்பது வரை என, பல தரப்பட்ட பிசினஸ் செய்தபின், ஒரு பெரிய மும்பை நிறுவனத்தின், மாவட்ட டீலராக நல்ல வருமானம் பெற்று, வசதியாக வாழ்ந்தார். அவர் தொட்டதெல்லாம் துலங்கியதில், பணவரவு குறைவில்லாமல் இருந்தது. பிள்ளையிடம் போய் செட்டில் ஆனபின், மாமாவின் தொடர்பு வெகுவாகக் குறைந்துவிட்டால், அவருடைய தற்போதைய நிலைமை பற்றி, அவ்வளவாக ராம்ஜிக்கு தெரியவில்லை. என்னதான் மோசமான நிதி நிலைமை என்றாலும், மாமா இப்படி ஒரு குறிப்பை, கல்யாண பத்திரிக்கையில் போட்டதை, ராம்ஜியால் ஜீரணிக்க முடியவில்லை. ‘தன் மாமாவைப் பற்றி ஆஹா ஓஹோ என்று, மனைவி ராதிகாவிடம் பீற்றிக்கொண்டதெல்லாம் பொய்யாகி, இப்போது அவள் கேலி செய்யும் நிலைமைக்கு, இந்த பத்திரிக்கை கொண்டு வந்து விடப் போகிறதே’ என, சிந்தித்தபடி குளித்து, வெளியே வந்தான்.

அவன் எதிர்பார்த்தபடியே ராதிகா, “என்னமோ… உங்க மாமாவைப்பத்தி பெரிசா வாய் ஓயாம அளப்பீங்களே.…அவர் அனுப்பின பத்திரிக்கைதானே இது! இப்ப தெரியுது உங்க மாமாவோட பெருமை. கல்யாண பத்திரிக்கையில அல்பமா, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டவங்கள, நான் இதுவரைக்கும் பார்த்ததேயில்ல. ‘அன்பளிப்பை தவிர்க்கவும்’ன்னு தான் போடுவாங்க. அது அவங்களோட பெருந்தன்மையை காட்டறதுக்கான அர்த்தம். அப்படி போட்டுட்டாங்களேன்னு யாரும் அன்பளிப்பு இல்லாம கல்யாணத்துக்கு போய்டப் போறதில்ல. அவங்க அவங்க வசதிக்கு ஏற்ப நூறோ, ஐந்நூறோ, ஆயிரமோ மொய் எழுதாம விடமாட்டாங்க. அப்படி இருக்கையில இத்தனை கேவலமா, ஒரு குறிப்பை போட்டு, கல்யாணத்துக்கு வர்றவங்கள உங்க மாமா கேவலப்படுத்தணுமா என்ன?” என்று, தன் மனைவி தாக்கியபோது ராம்ஜிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

“சரி அதை விடு. பெங்களூருக்கு டிக்கெட் ரிசர்வ் செய்யணும். என்னிக்கு கிளம்பலாம்ன்னு சொல்லு…’ என்று, மனைவியின் பேச்சுக்கு, முற்றுப்புள்ளி வைத்தான் ராம்ஜி.

சென்ட்ரல் ரயல் நிலையத்தில், ராம்ஜி ரிசர்வ் செய்திருந்த அதே ரயிலுக்காக, உறவுக் கூட்டமே கல்யாணத்திற்கு கிளம்பக் காத்திருந்தது.

ஒருவருக்கொருவர் பொதுவான விசாரிப்புக்கு பின், அந்த கல்யாண பத்திரிக்கை வாசகம் பற்றியே, அனைவரின் பேச்சும் இருந்தது.

“அசிங்கமா இருக்கு; நான் எல்லா கல்யாணத்துலயும், ஒரு பொக்கே கொடுத்துட்டு, விஷ் செய்திட்டு வந்திடுவேன். இப்பத்தான், கவர்ல பணத்த போட்டு கொடுக்கப் போறேன்,” என்றார் உறவினர் ஒருவர். “அதை ஏன் கேட்கறீங்க.… என் அறுபதாம் கல்யாணம், பையன், பொண்ணு கல்யாணம்ன்னு ஏகப்பட்ட கிப்ட் ஐட்டங்கள் வந்தது. அத்தனையும், இப்படி ஏதாவது கல்யாணம், காட்சி வந்தா தள்ளி விட்டுறது வழக்கம். ஆனால், சிவசங்கரன், இப்படி பத்திரிக்கையிலே போட்டுட்டானேன்னு, இந்த கல்யாணத்துக்கு பணமா கொடுக்கும்படியா ஒரு நிர்பந்தமாயிடுச்சு,” என்றாள் ஒரு பெண்மணி.

“ஒரு இலைக்கு இப்போ, முந்நூறு கணக்காகுது. ரெண்டு பேர் போய் டிபன், காபி, சாப்பாடுன்னு சாப்பிட்டாலே அறுநூறு, எழுநூறாயிடும். அதனாலே எங்க வீட்டுக்காரர், எந்த விசேஷத்துக்கு போனாலும், குறைஞ்சது ஐந்நூறு, ஆயிரம் தான், மொய் எழுதணும்ன்னு சொல்வாரு. பொதுவா, இப்படித்தான் எல்லாருமே நினைப்பாங்க. அப்படி இருக்குற போது, சிவசங்கரன் பத்திரிக்கையில இப்படி அநாகரிகமா போட்டிருக்க வேண்டாம்,” என்றாள் இன்னொரு உறவுக்காரி.

“மொய்க்கவரை காட்டினாத்தான் கல்யாண சத்திரத்திரேல விடுவோம்ன்னு போடாம விட்டாரே” என்று, கேலியாக கூறினார் மற்றொருவர்.

இதுபோன்று அவரவர் அபிப்பிராயங்களை, அவலாகமென்று, அந்த பெங்களூரு வண்டியில் உறவுகள் பயணித்தன.

ஆனால், அவர்களின் வாயெல்லாம் கல்யாண மண்டபத்தின் வாயிலை அடைந்தவுடன் அடைத்துவிடும்படியாக, மண்டபத்தின் பிரமாண்டம் வரவேற்றது.

சிவசங்கரனும், அவர் மனைவியும் வெளியே நின்று, எல்லாரையும் வாய் நிறைய வரவேற்றனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும், தனி, ‘ஏசி’ அறை: ஏகப்பட்ட உபசாரங்கள் என, தூள் கிளப்பிக் கொண்டிருந்தார் சிவசங்கரன்.

உறவினர் அனைவரும் ஐந்தாறு ஐட்டங்களோடு மாலை நேர டிபனை சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், அங்கே வந்த ஒருவர், “நான் தான் கல்யாண பெண்ணோட அப்பா. எங்க சம்பந்தி எனக்கு ஒரு செலவும் வைக்கலே. எல்லா செலவையும் அவரே செய்றார். ரொம்ப நல்ல மனுஷர். ஏதோ நான்தான் இத்தனை தடபுடலா கல்யாணம் செய்யறேன்னு நீங்க நினைக்கக்கூடாதுன்னு தான் இதச் சொல்றேன். அதுக்கும்மேல, இப்படி ஒரு சம்பந்தியோட நல்ல பண்பு உங்களுக்கெல்லாம் தெரியணுமேன்னும், இதை நானா எல்லார்கிட்டயும் சொல்றேன்,” என்று கூறி, உபசரித்து விட்டு நகர்ந்தார்.

அன்றைய ரிசப்ஷன், ராத்திரி சாப்பாடு என, எல்லாமே உறவுகளை அசர வைத்தது. ரிசப்ஷனிலும் பொக்கே, பொருட்கள் என்று குவியாமல், வந்திருந்த எல்லாருமே பணமாக கொடுப்பதை, அனைவரும் கவனித்து பார்த்தனர்.

அடுத்த நாள் கல்யாணம்; அதிகாலையில் உறவுக்காரர்கள் அனைவருக்கும் பேதமில்லாமல் கொடுக்கப்பட்ட புடவை, வேஷ்டி, குழந்தைகளின் டிரஸ் எல்லாவற்றிலும் சிவசங்கரனின் பெருந்தன்மையும் தாராளமும் தெரிந்தது. உறவுக்காரர்கள் வெட்கப்பட்டபடி, தாங்கள் அப்படி பேசியதற்கு வருத்தப்பட்டாலும், கல்யாண பத்திரிக்கையில், ஏன் அப்படி ஒரு வாசகத்தை சிவசங்கரன் போட்டார் என்பது புரியாமல் குழம்பினர். முகூர்த்தம் முடிந்தது; கல்யாண வீட்டில் அனுபவித்த தடபுடல் உபசாரத்திற்கு, தாங்கள் ஏற்கனவே தீர்மானித்து கவரில் போட்டிருந்த பணம் குறைவு என்பதை உணர்ந்த உறவினர் அனைவருமே, அதன் கூட இன்னும் இரண்டு மடங்கு அதிகமான தொகையை மொய் வைத்தனர்.

திருமணம் முடிந்து திரும்பிய ஒரு வாரத்தில், ராம்ஜி பெயருக்கு, ஒரு கூரியர் வந்தது. வீட்டிலிருந்த ராதிகாதான், அதை வாங்கினாள். ஒரு தொண்டு நிறுவனத்திடமிருந்து, ஐயாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்ததற்கான ரசீது வந்திருந்தது. அதை பார்த்த ராதிகாவிற்கு, “ஆதரவற்றோர் இல்லத்திற்கு, ஐயாயிரம் ரூபாய் அனுப்பியதை எதற்கு தன்னிடம் மறைக்க வேண்டும்’ என்று, கணவன் மேல் கோபம் வந்தது. இருந்தாலும், நல்ல காரியத்திற்கு பணம் அனுப்பப்பட்டதில் அவளுக்கு சந்தோஷமே! ஆபீசிலிருந்து திரும்பியவனிடம், இதைப் பற்றி கேட்டதும், அவன் புரியாமல் முழித்தான். “ஏன் இப்படி திருட்டு முழி முழிக்கறீங்க. நல்ல காரியம்தானே செய்திருக்கீங்க.…எங்கிட்ட தைரியமா சொல்லிட்டே செய்திருக்கலாமில்லே,” என்றாள்.

“சத்தியமா எனக்கு ஒண்ணும் புரியல ராதிகா. எந்த அனாதை ஆசிரமத்துக்கும் நன்கொடை செய்யணும்ன்னு நான் நினைச்சதே இல்லை. அப்படியே கேட்டிருந்தாலும், ஏதோ நூறோ, இருநூறோ போடுவேன். இப்படி ஐயாயிரமா அனுப்பியிருப்பேன்… அதுதான், புரியாம முழிக்கறேன்” என்று குழப்பத்துடன் சொன்னான் ராம்ஜி. ராம்ஜியை போலத்தான், தர்ம காரியங்கள் செய்வதில் எல்லாருடைய போக்கும் இருக்கும் என்பதை அறிந்திருந்த சிவசங்கரன், இப்படி ஒரு அறிவிப்பை, கல்யாண பத்திரிக்கையில் போட்டு, பொக்கே, கிப்ட் என்று வீணாக்காமல், அனைவரது அன்பளிப்பையும் பணமாக பெற்று, அதை அவரவர்கள் பெயரிலேயே, ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக தந்து தனக்கும், அவர்களுக்கும் புண்ணியம் தேடிக் கொண்டுவிட்டிருந்தார். இப்படி மொய்ப்பணத்தை, மெய்ப்பணமாக சிவசங்கரன் உபயோகப் படுத்தியிருப்பது, எல்லாருக்கும் மெதுவாக தெரிய வந்த போது, அனைவரும் நெகிழ்ந்தனர்.

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களை மகிழ்வியுங்கள்!

கருத்துகள்

உங்கள் கருத்து அங்கீகரிக்கப்பட்ட பிறகு காண்பிக்கப்படும்

கருத்துகள் ஏற்றப்படுகின்றன...

கூடை

மொத்தம்

₹0